கொழும்பு நகர் – டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ள படல்கும்புர 5ஆம் தூண் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் நாய் பிரிவின் ´பெனி´ என்ற நாயை ஈடுபடுத்தி குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வாழைத் தோட்டமொன்றில் இரத்தக் கறைக்கு ஒத்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் ´பெனி´ நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடந்த முதலாம் திகதி பகல் கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து யுவதியின் தலையில்லாத சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலம் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பயணப் பையை வைத்துச் சென்ற நபர் ஹங்வெல்ல பகுதியிலிருந்து 143 பேருந்தில் அதனை கொண்டு வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டைப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் 52 வயதுடைய புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் என விசாரணையின் பின்னர் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபர் விஷமருந்தி உயிரிழந்துள்ளதாகவும், இதேநேரம், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top