கொரோனா வைரஸ் தாக்கத்தை தணிக்கும் முகமாக இலங்கை அரசினால் பயணத்தடை அமுல்படுத்தப்பட்ட நிலையில், இலங்கையில் கிராமப்புறங்கள் பலவற்றில் வாழும் தினக்கூலி மக்கள் தொழில்வாய்ப்பின்றி குடும்பத்துடன் பட்டினியால் வாழ்ந்து வருகின்றனர்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவுற்குட்பட்ட சிதம்பரபுரம் கற்குளம் படிவம் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் விறகு வெட்டுதல், மேசன்வேலை, கூலிவேலைகளுக்கு சென்று அதன்மூலம் பெறப்படுகின்ற வருமானத்தில் குடும்பச் செலவை நகர்த்திச் செல்லும் மக்களாவர். தற்போதைய பயணத்தடை காரணமாக உணவின்றி பட்டினியால் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

வேறு இடங்களில் இருந்து இங்கு குடியேறிய மக்களும், எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி தாம் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல மாவட்டங்களிலும் பல மக்கள் பட்டினியால் தவிப்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரவசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கைக்குழந்தைகள் முதியவர்களுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பயணத்தடை இவர்கள் வாழ்வில் பட்டினியையும் உருவாக்கியுள்ளது.

அத்தோடு போக்குவரத்துக்காக பஸ்சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் பல சிரமங்களை இவர்கள் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடதக்கது

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top