வைத்தியசாலை வளாகம் ஒன்றில் இருக்கும் மரத்தடியில் கொரோனா கவச உடை அணிந்து அன்புலன்ஸ் சாரதி ஒருவர் ஓய்வு எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது.

சாலையில் சைரன் சத்தத்துடன் பறக்கும் ஆம்புலன்ஸ்களை பார்த்திருப்போம். அப்போது எல்லாம் நம் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும். யாருக்கோ அவசரமாக மருத்துவ உதவி தேவை இருக்கிறது என நினைத்திருப்போம். அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் சிரமங்களை நாம் நினைத்திருப்போமா.

கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒரு நாளைக்கு எத்தனை ட்ரிப் அடிப்பார். எவ்வளவு நோயாளிகளை தினம் தினம் எதிர்க்கொள்கிறார்.

அவருக்கு உணவு உண்ணவோ, சிறிது ஓய்வு எடுக்கவோ நேரம் கிடைக்குமா? அவர்களுக்கு சம்பளம்தான் எவ்வளவு? எதாவது நாம் சிந்தித்திருப்போமா.மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் புகைப்படம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

நாம் சிறிது நேரம் மாஸ்க் அணியவே சங்கடப்படுகிறோம். முழுகவச உடை அணிந்து கொண்டு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நிலையை அந்தப் புகைப்படம் விளக்குகிறது. 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்த கோலன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனை வளாகம் ஒன்றில் இருக்கும் மரத்தடியில் கொரோனா கவச உடை அணிந்து ஓய்வு எடுக்கும் ஒரு நபரின் புகைப்படம் அது. அந்தப்பதிவிலே புகைப்படத்தில் இருக்கும் நபர் குறித்து தெரிவித்துள்ளார். 

அந்தப்பதிவில், “ இது என்னுடைய இளம்வயது நண்பன் சங்முயான். இவருக்கு 24 வயது தான் ஆகிறது. சுரசந்த்பூர் மாவட்ட மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஒரு நாள் சம்பளம் 248 ரூபாய். தன்னுடைய வாழ்க்கையை பணயமாக வைத்து இந்த பணியை செய்துவருகிறார். இதுபோன்ற முன்களப்பணியாளர்களுக்கு நாம் உதவவேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப்புகைப்படம் வைரலானது உள்ளூர் ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்துள்ளன. சங்முயான் சொந்த கிராமம் லம்கா. இவர் கடந்த 6 மாதங்களாக இந்த மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும் பணியை செய்து வருகிறார்.

வெள்ளிக்கிழமையன்று அதிக ட்ரிப் அடித்ததால் கொஞ்சம் அசதியில் கொரோனா வார்ட் அருகில் ஓய்வு எடுத்தேன். இந்த புகைப்படத்தை யார் எடுத்தது என்பது கூட தெரியாது எனக் கூறீயுள்ளார். 

மேலும், “நேரம் எல்லாம் இல்லை. காலையில் 6 மணிக்கு கூட போன் வரும். நான் போய் நோயாளிகளை அழைத்து வருவேன். வாரத்தில் 7 நாள்களும் வேலை இருக்கும்.

எனது வேலையில் ஆபத்து இருந்தால் மற்றவர்களுக்கு உதவும் இடத்தில் நான் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என சங்முயான் கூறியுள்ளார். 


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top