முகக் கவசம் அணிந்து செல்லாத இளைஞன் ஒருவர் மீது, இராணுவ வீரர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில், இன்று (04) இடம்பெற்றுள்ளது.


இதனால், அப்பகுதியில், பெரும் பதற்றம் நிலவியது. ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


ஆனந்தபுரம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக இரணைப்பாலை சந்திக்கு, குறித்த இளைஞன் மாஸ்க் அணியாது சென்றுள்ளார். இதன்போது, அப்பகுதியில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவர், அவ்விளைஞனை அழைத்து, அணிந்து செல்லுமாறு கூறி குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது


இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், இராணுவத்தினருடன் முரண்பட்டதுடன், மாஸ்க் அணியாத காரணத்தால் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முடியுமா என வினவினர். இதனால், அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், குறித்த இடத்திலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட இளைஞன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு, சிகிச்சை பெறச் சென்றுள்ளார். இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top